வாழிய நீ எம்மான்!



வாழிய நீ எம்மான்! 

வாலிபக் கவியே
வாலியே
வாழிய நீ எம்மான்!
 
வயோதிகம் உன்னைக் கவ்வியது 
வருத்தத்தால் எங்கள் மனம் வாடியது!
 
ஸ்ரீரங்கத்துச் சிவப்பே!
 
காவிக் கலரையும் 
கறுப்புக் கலரையும் 
ஒரே நேரத்தில் காதலித்தவன் நீ!
 
உன் பேனா மைக்குத்தான் 
எத்தனை நிறங்கள்!

காற்று வாங்கக் 
கடற்கரைக்குப் போனவன்
கடலுக்குள்
கண்ணீர்த் துளிகளைக்
கண்டாய்!

அதனால்தானே
"தரைமேல் பிறக்க வைத்தாய் எங்களைத்
தண்ணீரில் தவிக்க வைத்தாய்"
என்றாய்!

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"
என்றவனே!

உன் கடைசி மூச்சிருக்கும் வரை
எழுதினாய்! எழுதினாய்! எழுதினாய்!

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"
தாயின் பெருமையை
தங்கத் தமிழால்
சொன்னவனே!

இறைவன்
தன் அரசவைக் கவிஞனாக்க
உன்னை அழைத்தானோ?

"புதிய வானத்தையும் புதிய பூமியையும்"
கண்டுவிட்டதனால்!

அவன் அழைத்ததும் சென்று விட்டாயோ?

வானம்பாடியே
பறந்துவிட்டாய்!

மீண்டும் பிறந்து வா!

அடுத்த முறையும்
அழகுத் தமிழ்க் கவிஞனாய்ப்
பிறந்து வா!

வாழிய நீ எம்மான்!
வாலிபக் கவியே
வாலியே
வாழிய நீ எம்மான்!

அன்புடன்,
மு.ஜெயக்குமார்


 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக